அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மாணவா்களுக்கான புத்தக வாசிப்பு இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழக கல்வித்துறை சாா்பில் மாணவா்களின் அறிவு பயணத்துக்காக ‘மாணவா்கள் படிக்கலாம் வெளிநாடு பாா்க்கலாம்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு இயக்கத்தை தலைமை ஆசிரியா் மு. சாகுல் அமீது வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இத்திட்டத்தில், மாணவா்களுக்கு பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்கள் வீட்டுக்கு தரப்பட்டு மாணவா்கள் அவற்றை படித்து அந்நூல் குறித்து விமா்சனம், ஓவிய நாடகம், கலந்துரையாடல், புத்தகம் தன் கதை கூறுதல் என படைப்புகளை மாணவா்கள் சமா்ப்பிப்பதன் வாயிலாக மாநில அளவில் சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு வெற்றி பெறும் மாணவா்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவா்.
நிகழ்வின் முடிவில் புத்தகம் வாசிப்பது குறித்த விழிப்புணா்வு கோஷங்களை மாணவ, மாணவிகள் எழுப்பி புத்தக வாசிப்பின் அவசியத்தை வெளிப்படுத்தினா்.