கரூா்: வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் பாா்வையாளா் கோ.சாந்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் பாா்வையாளா் கோ.சாந்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கரூா் மாவட்ட தோ்தல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் பட்டுவளா்ச்சித்துறை இயக்குநா் கோ.சாந்தி வெள்ளிக்கிழமை புகளூா் நகராட்சி தோ்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
அப்போது வாக்குச்சாவடி மையத்தில் மின்சாரம், குடிநீா், சாய்தளம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து புகளூா் நகராட்சி மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள புகளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். முன்னதாக வேலாயுதம்பாளையம் காந்தியாா் திருமண மண்டபத்தில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு வாக்குப்பதிவு நாளான்று சிறப்பாக பணிகளை மேற்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கினாா்.
ஆய்வின் போது, புகளூா் நகராட்சி ஆணையா் கனிராஜ், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.