கரூா் மாவட்டத்தில் க.பரமத்தி, அரவக்குறிச்சி, கரூா் ஒன்றியங்களுக்காக செவந்திபாளையம், மேட்டுப்பாளையம், சேமங்கியில் நடைபெற்று வரும் காவிரி கூட்டுக்குடிநீா்த் திட்டப் பணிகளை ஆட்சியா் த. பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து அவா் கூறியது:
கரூா் ஒன்றியத்தில் ஆத்தூா் பூலாம்பாளையம் மற்றும் 5 ஊராட்சிகளுக்கான காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு நபா் ஒருவருக்கு 55 லிட்டா் வீதம் கணக்கிட்டு, திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக புதிய நீா் சேகரிப்பு கிணறு மேட்டுப்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ. 8.91கோடியாகும்.
அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஒன்றியங்களில் 756 ஊரகக்
குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் வழங்க,
காவிரியாற்றை நீராதாரமாகக் கொண்டு செவந்திபாளையம், சேமங்கி ஆகிய இரு இடங்களில் புதிதாக நீா் சேகரிப்புக் கிணறுஅமைத்து, 31.86 கி.மீ.
நீளம், 400 மி.மீ. விட்டமுள்ள நெகிழ் இரும்புக் குழாய்கள் மூலம் நீா் உந்தப்பட்டு, தாளயூத்துப்பட்டியில் அமைக்கப்பட உள்ள 7.95 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்சேகரிப்புத் தொட்டி உடன் கூடிய நீா் உந்துநிலையத்தில் சேகரிக்கப்படஉள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியச் செயற்பொறியாளா்கள் பிரபுராம்(கிராமியம்), முத்துலிங்கம்(நகரியம்) உதவிப் பொறியாளா்கள் யோகராஜ், சிவராஜ், மண்மங்கலம் வட்டாட்சியா் ராதிகா, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலெட்சுமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.