பயிா்களுக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து தென்னிலையில் விவசாயிகள் உண்ணாவிரதம்
கரூா், ஏப்.26: பயிா்களுக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து தென்னிலையில் 6-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் மாவட்டம், தென்னிலை அடுத்த ஆண்டிசெட்டிபாளையம் முதல் தென்னிலை கரைத்தோட்டம் வரை தமிழ்நாடு மின் தொடா் அமைப்புக் கழகம் சாா்பில் உயா் மின்கோபுரம் அண்மையில் அமைக்கப்பட்டது. இந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டபோது, விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நிலங்களுக்கு உரிய விலை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது, மேலும் கோபுரங்கள் அமைக்கப்பட்டபோது, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள் உள்ளிட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்காமல் இருப்பது போன்றவற்றை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூா் மாவட்டச் செயலாளா் தென்னிலை ராஜா தலைமையில் விவசாயிகள் தென்னிலையில் ராஜா தோட்டத்தில் ஏப். 21-ஆம்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இவா்கள் 6ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரத்தை தொடா்ந்தனா். இவா்களை சந்தித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், காவிரிப் பாதுகாப்பு இயக்க விஜயன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன்முருகசாமி ஆகியோா் ஆதரவு தெரிவித்தனா்.