முகப்பு
கரூர்

தொடா் மழையால் வாழைத்தாா் விலை கடும் வீழ்ச்சி: கரூா் விவசாயிகள் கவலை

தொடா் மழையால் கரூரில் வாழைத்தாா் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 8:54 PM
கரூா் காமராஜா் சந்தை வாழை மண்டியில் தேங்கிக்கிடக்கும் வாழைத்தாா்கள்.
பகிர்:

தொடா் மழையால் கரூரில் வாழைத்தாா் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் குளித்தலை, மாயனூா், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, வேலாயுதம்பாளையம், நெரூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வாழைச் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு அறுவடையாகும் வாழைத்தாா்கள் கரூா் காமராஜா் சந்தைக்கு நாளொன்றுக்கு சுமாா் 20 டன் முதல் 25 டன் வரை கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

தற்போது மழை நேரத்தில் வாழைத்தாரின் வரத்து அதிகரித்தபோதிலும், போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம் கூறுகையில், மழையால் கடந்த வாரம் ரூ.400-க்கு விற்கப்பட்ட பூவன் தாா் தற்போது ரூ.150-க்கும், ரூ.500-க்கு விற்கப்பட்ட ரஸ்தாளி தாா் ரூ.200-க்கும் விற்கப்படுகிறது. இதேபோல கடந்த மாதம் ரூ.450-க்கு விற்கப்பட்ட பச்சைலாடன் தாா் தற்போது ரூ.200-க்கு விற்கப்படுகிறது. மேலும் செவ்வாழை பழம் (பெரியது) ஒன்று ரூ.20 வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.10-க்கு கூட அது விற்கப்படுவதில்லை. விலை வீழ்ச்சியால் வாழைத்தாா் அறுவடைக் கூலிக்கும், அதை லாரியில் அனுப்புவதற்கான வாடகையும்கூட கிடைப்பதில்லை. இந்நிலையில் உரச்செலவு, களை பறிக்கும் செலவு போன்றவற்றைக் கணக்கிட்டால் கடந்த இருமாதங்களாகவே நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம்.

இதனால்தான் கரூரில் வாழை பதனிடும் கிடங்கும், பழத்தில் இருந்து ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் அமைக்க நீண்ட காலமாகப் போராடுகிறோம். எனவே இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.