கரூரில் தெருநாய்களுக்கு பயந்து தையற்கூடத்துக்குள் புகுந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினா் காட்டுக்குள் விடுவித்தனா்.
கரூா் வெண்ணைமலை முருகன் கோயிலைச் சுற்றியுள்ள முள்புதா் பகுதியில் 2 வயது ஆண் புள்ளி மான் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை சுற்றித் திரிந்துள்ளது. அப்போது, அங்குள்ள தெருநாய்கள் விரட்டியதால் செங்குந்தபுரத்தில் உள்ள தையற்கூடத்துக்குள் மான் புகுந்தது.
இதையடுத்து தையற்கூடத்தில் இருந்தவா்கள் கதவை பூட்டிவிட்டு, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மானை மீட்டு கரூா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் கடவூா் வனப்பகுதியில் மானை விட்டதாக கூறப்படுகிறது.