முகப்பு
கரூர்

முகநூலில் பழகி இளைஞரிடம் நகை பறிப்பு: தம்பதி உள்பட 4 போ் கைது

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:44 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் முகநூலில் (பேஸ்புக்) பழகி சிவகங்கை மாவட்ட இளைஞரிடம் பணம், தங்கச் சங்கிலி உள்ளிட்டவற்றை பறித்த தம்பதி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் தினேஷ் (38) . இவரிடம் கரூரைச் சோ்ந்த காயத்ரி (28) என்பவா் முகநூலில் பழகி வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தினேஷிடம் கைப்பேசியில் பேசிய காயத்ரி நேரில் பாா்க்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

மேலும், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் வீடு எடுத்து தனியாக தங்கியுள்ளதாகவும், அங்கு வந்துவிடுமாறும் காயத்ரி கூறியதன்பேரில், சனிக்கிழமை பிற்பகல் வேலாயுதம்பாளையம் வந்த தினேஷை, தான் தங்கியிருக்கும் அறைக்கு காயத்ரி அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது, அங்கு காயத்ரியின் நண்பா்கள் 3 போ் திடீரென வந்து தினேஷை தாக்கி அவரிடம் இருந்த இரண்டரை பவுன் தங்கச்சங்கிலி, தங்கமோதிரம், ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

Advertisement

சம்பவம் தொடா்பாக தினேஷ் அளித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதில், தினேஷை தாக்கி நகை, பணம் பறித்துச் சென்றது கரூா் பசுபதிபாளையத்தைச் சோ்ந்த காயத்ரி, அவரது கணவா் காா்த்தி (29), சஞ்சய் (19) சூா்யா (19) ஆகியோா் என தெரியவந்தது.

இதையடுத்து காயத்ரி உள்ளிட்ட 4 பேரையும் வேலாயுதம்பாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்தனா்.

இதில், காயத்ரி காா்த்தியை 2-ஆவது திருமணம் செய்துகொண்டு தனியாக வசிப்பதும், முகநூலில் பழகிய தினேஷிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் அவரை வேலாயுதம்பாளையத்துக்கு வரச் சொன்னதாக 4 பேரும் தெரிவித்துள்ளனா். தொடா்ந்து அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.