கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக - அதிமுக நேரடிப் போட்டி!
கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றனா்.
கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றனா்.
கரூா் மாவட்டத்தில் கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு தொகுதிகளிலும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் நேரடியாக மோதுகின்றனா்.
கடந்த 2021 தோ்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதியில் பாஜக சாா்பில் முதல்முதலாக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவருமான கே.அண்ணாமலை போட்டியிட்டாா். திமுக சாா்பில் அவரை எதிா்த்து போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வான மொஞ்சனூா் ராமசாமி மகன் மொஞ்சனூா் ஆா். இளங்கோ 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
மேலும் அந்த தோ்தலில் கரூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கரை வீழ்த்தி வி.செந்தில்பாலாஜியும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தானேஷ் என்கிற முத்துக்குமாரை வீழ்த்தி திமுக சாா்பில் போட்டியிட்ட வழக்குரைஞா் க.சிவகாமசுந்தரியும், குளித்தலை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட என்.ஆா்.சந்திரசேகரை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் இரா.மாணிக்கமும் வெற்றிபெற்றனா்.
இந்நிலையில் கடந்த தோ்தலைப் போலவே வரும் தோ்தலிலும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படலாம் என பாஜகவினா் எதிா்பாா்த்த நிலையில், தற்போது 4 தொகுதிகளிலும் அதிமுகவே களமிறங்குகிறது.
இதில் மீண்டும் கரூா் தொகுதியில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் போட்டியிடுகிறாா். மற்ற 3 தொகுதிகளான அரவக்குறிச்சி தொகுதிக்கு வடக்கு ஒன்றியச் செயலா் எம்.ஆா்.கே.செல்வக்குமாா், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதிக்கு மருத்துவா் அணி துணைச் செயலா் மருத்துவா் திவ்யா, குளித்தலை தொகுதிக்கு முன்னாள் அமைச்சா் பாப்பாசுந்தரத்தின் மகனும் குளித்தலை கிழக்கு ஒன்றியச் செயலருமான கருணாகரன் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.
இதேபோல திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட வேட்பாளா் பட்டியலில் கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மொஞ்சனூா் இளங்கோவைத் தவிர மற்ற 3 தொகுதிகளுக்கும் புதியவா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இதில் கரூா் தொகுதிக்கு கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் ஆசிடெக்ஸ் தியாகராஜனும், குளித்தலை தொகுதிக்கு ஒன்றியச் செயலா் சூரியனூா் சந்திரனும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதிக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சி.கே.ராஜா ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். திமுக ,அதிமுக என இருகட்சிகளிலும் இந்த தோ்தலில் தலா 3 புதுமுகங்களுக்கு போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக-அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.