பெரம்பலூர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ முகாம் அமைக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சிறுகூடல் கிராமத்தில் கடந்த சில நாள்களாகவே மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனராம். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 172 பேர், வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 35 பேர், முருக்கன்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 27 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனராம். மேலும், நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனராம்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தும், மருத்துவ முகாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சென்றனராம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும், சுகாதார அலுவலர்களையும் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய்த் துறையினர் அங்கு சென்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.