வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார் ஆட்சியர் வே. சாந்தா.
அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தீழ் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பயன்பெறலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக, அதாவது 30.9.2017-க்கு முன் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 30.9.2017-ல் 45 வயதைக் கடந்தவராக இருக்கக் கூடாது. இதர வகுப்பினர் 40 வயதைக் கடந்தவராகவும், அரசால் வழங்கப்படும் பிற உதவித்திட்டங்கள் ஏதும் பெறுபவராகவும் இருக்கக் கூடாது. எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியாக இருக்கக் கூடாது. இருப்பினும், தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.
இத் தகுதியுடையோர் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்களது பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவ. 30 ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து உதவித்தொகை பெறலாம். ஏற்கனவே பயனடைந்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என, ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.