முகப்பு
பெரம்பலூர்

காட்சிப்படுத்துதலில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான இம்பார்ட் ஆய்வறிக்கை காட்சிப்படுத்துதலில் வெற்றி பெற்ற மாணவர்களை,  முதன்மைக்கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி செவ்வாய்க்கிழமை பாராட்டினார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

மாநில அளவிலான இம்பார்ட் ஆய்வறிக்கை காட்சிப்படுத்துதலில் வெற்றி பெற்ற மாணவர்களை,  முதன்மைக்கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி செவ்வாய்க்கிழமை பாராட்டினார். 
பள்ளிக்கல்வித் துறையில் ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் 9 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து, பள்ளி வருகைப் பதிவை உயர்த்தவும், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் திறனை மேம்படுத்தவும், செயல்வழிக் கற்றல் மூலம் ஆய்வறிக்கை தயாரித்து காட்சிப்படுத்தல் இம்பார்ட் என்ற சிறப்பு செயல்திட்டத்தின் மூலம் நிகழ் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 
இதில், பெரம்பலூர் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ஊட்டியில் கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான காட்சிப்படுத்துதலில் பங்கேற்றன. இதில், பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆங்கிலப் பாடத்தின் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் அரும்பாவூர் கிராம மக்களின் ஆர்வம் என்ற ஆய்வுக் கட்டுரையும், ஈச்சம்பட்டி ஆதிதிராவிடர் உயர்நிலைப பள்ளியின் சமூக அறிவியல் பாடத்தின், ஈச்சம்பட்டி கிராமத்தின் நீர் ஆதாரமும் மேம்பாடும் என்ற ஆய்வுக் கட்டுரையும் தேர்ந்தெடுக்கப்பட்டன. 
இதையடுத்து மேற்கண்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை, பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி, பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநர் மார்க்ரெட் எமிலி ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 
மாவட்டக் கல்வி அலுவலர் பிருதிவிராசன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. அண்ணாதுரை, இம்பார்ட் முதன்மைக் கருத்தாளர் ஆசிரியர் ப. மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →