தேசிய மற்றும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகளை செவ்வாய்க்கிழமை பாராட்டினார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
ரிலையன்ஸ் பவுன்டேசன் சார்பில், தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் மும்பையில் நவ. 14 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் பங்கேற்ற பெரம்பலூர் விளையாட்டு விடுதி தடகள மாணவிகள் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன், ஒட்டுமொத்த சீனியர் பிரிவில் தேசிய அளவில் 2 ஆம் இடமும், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையும் பெற்று சாதனை படைத்தனர். வீராங்கனை ரா. சங்கீதா மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கம் பெற்று சிறந்த தேசிய வீராங்கைனைக்கான விருது பெற்றார்.
மேலும், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அண்மையில் நடைபெற்ற குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் 17 வயதுக்குள்பட்ட பிரிவில் 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர்.
மாநில போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் அனைவரும் தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகளுக்கு, தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் அனைவரும் பெரம்பலூர் விளையாட்டு விடுதியில் தங்கி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். வெற்றி பெற்ற வீராங்கனைகள், பயிற்சியாளர் க. கோகிலா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ம. ராமசுப்பிரமணிய ராஜா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா பாராட்டு தெரிவித்தார்.