மின் கட்டணத்துடன் இ.வரி, ஜி.எஸ்.டி வரி வசூலிப்பதை கைவிட வேண்டுமென மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் மாநில செயலர் ஆர். ராஜாசிதம்பரம் அளித்த மனு:
பழுதடைந்த மின்மாற்றிகளை 2 நாள்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என்னும் மின்வாரியம் விதித்துள்ள கெடுவுக்குள், பெரம்பலூர் மாவட்டத்தில் பழுதடைந்த மின் மாற்றிகளை சரிசெய்வதில்லை. இந்த நடைமுறையை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மின்வாரிய உயரதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். சரியான அழுத்தத்தில் மின் விநியோகம் செய்ய, அதிக எண்ணிக்கையில் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும்.
மின் கட்டணம் வசூலிக்கும் ரசீதில் எந்த எந்த இனத்துக்கான கட்டணம் என்பது குறித்த விவரத்தை குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட அளவை விட குறைவான அழுத்தத்தில், குறைவான மின்சாரம் வழங்கப்படுவதாக மீட்டரில் கணக்கிடுவதை காரணம் காட்டி, மின் கட்டணத் தொகையுடன் அபராதத்தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும். மின் கட்டணத்துடன் இ.வரி, ஜி.எஸ்.டி வரி வசூலிக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். மழை, காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மின்பாதைக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை வெட்டி மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.