பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 10 திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா கடனுதவிகளை வழங்கினார்.
ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 227 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சமூக நலத்துறை சார்பில் காய்கறி, பழ வியாபாரங்கள், கறவை மாடு மற்றும் ஆடு வளர்த்தல் உள்ளிட்ட சுயதொழில் தொடங்குவதற்காக 10 திருநங்கைகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் மதிப்பில் காசோலைகளை ஆட்சியர் சாந்தா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சேதுராமன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பூங்கொடி, மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.