பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், கிழக்குராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வே. ராமலிங்கம் (79), தனது பேரன் பெ. ராகுலுடன் (19) பெரம்பலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தார். அப்போது, அன்னமங்கலம் கிராமத்திலிருந்து எசனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற அன்னமங்கலம் மாதாகோயில் தெருவைச் சேர்ந்த ரத்தினகுமார் (61) மோட்டார் சைக்கிள் மீது, மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராமலிங்கம் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்திலேயே அங்கு உயிரிழந்தார். காயமடைந்த ராகுல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ரத்தினகுமார் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.