நஷ்டஈடுகோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நஷ்ட ஈடு
பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மானாவாரியாக சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்துக்கு, ஹெக்டேருக்கு ரூ. 7,410 மும், இறவை சாகுபடிக்கு ரூ. 13,500- மும் நஷ்ட ஈடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது போதுமானதல்ல.
உற்பத்தி செலவின் அடிப்படையில், நஷ்ட ஈடுத்தொகையை ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். அனைத்து வங்கிகளிலும் பெற்ற விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும். தேசிய விதைக் கழகம் மூலம் தரமான விதைகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பெரம்பலுர் புறநகர்ப் பேருந்து நிலையம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி, மாவட்டத் துணை நிர்வாகிகள் விநாயகம், கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாநிலச் செயலர் சாமி. நடராஜன், மாவட்டச் செயலர் என். செல்லதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ. கலையரசி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ், மாவட்டத் துணை நிர்வாகிகள் பொன்னுசாமி, மணி, கண்ணன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.