பெரம்பலூரில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்த நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலரும், வழக்குரைஞருமான ப. அருளை பெரம்பலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
பெரம்பலூரில் வேலை மற்றும் பிற சலுகைகள் வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்களை அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குரைஞர் ப. அருள் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் துணை கண்காணிப்பாளர் எம். ரெங்கராஜ் மேற்பார்வையில், ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான தனிப்படையினரும் விசாரித்து வருகின்றனர். மேலும், வழக்குரைஞர் அருளிடம் கடந்த 23 ஆம் தேதி மேற்கொண்ட விசாரணையில் பாலியல் விவகாரத்தில் தன்னிடம் உள்ள ஆதாரங்களில் சிலவற்றைக் காட்டியிருக்கிறார். இருப்பினும், இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் சுணக்கம் காட்டி வருவதாக புகார்தாரர் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தன்னிடம் பேசிய ஆடியோ ஆதாரத்தை கடந்த 25 ஆம் தேதி அருள் வெளியிட்டார். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸாரின் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய வழக்குரைஞர் அருள், இந்த விசாரணையை சிபிஐ போலீஸார் விசாரணை நடத்தக்கோரி, சென்னையில் புதன்கிழமை (மே 1) மனு அளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த வழக்குரைஞர் அருளை, பெரம்பலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.