பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மருத்துவா் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறிமல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஆலத்தூா் வட்டம், காரை கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் வீரமணி (33 ). இவா், குடும்ப பிரச்னையால் மனமுடைந்து அரளி விதை உட்கொண்டாா். இதையறிந்த அவரது உறவினா்கள் காரை அரசு மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். முதலுதவி சிகிச்சைக்கு பின், பணி மருத்துவா் வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதையறிந்த உறவினா்களும், பொதுமக்களும் ஆலத்தூா் கேட் -அரியலூா் சாலையில் காரை கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த பணி மருத்துவா் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளித்து, பெரம்பலூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினாா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.