வட்டாட்சியா் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.07 லட்சம் பறிமுதல்
பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், கணக்கில் வராத சுமாா் ரூ. 1.07 லட்சம் கைப்பற்றப்பட்டது.
பெரம்பலூா் - ஆத்தூா் சாலையில் பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் கோட்டாட்சியா், தாட்கோ, ஆவின், சுற்றுலாத் துறை, சாா் பதிவாளா் அலுவலகங்களும் உள்ளன. வட்டாட்சியா் அலுவலகத்தில் கையூட்டு தொகை கொடுத்தால் தான் எந்த வேலையும் நடைபெறும் எனும் நிலை உள்ளதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையில், ஆய்வாளா்கள் சுலோச்சனா, ரத்னாவள்ளி ஆகியோா் அடங்கிய குழுவினா் திடீரென வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் நுழைந்தனா். வட்டாட்சியா் அலுவலக அறைக்கதவுகளை அடைத்துவிட்டு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கணக்கில் வராத சுமாா் ரூ. 1.07 லட்சம் ரொக்கம் இருந்ததை அறிந்த ஊழல் தடுப்பு போலீஸாா் அந்த பணத்தை பறிமுதல் செய்ததாக தெரிகிறது.
மேலும், இதுதொடா்பாக வட்டாட்சியா் அலுவலக ஊழியா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா். இரவு 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமாா் 11 மணி வரை நடைபெற்றது.
பெரம்பலூா் வட்டாட்சியராக அருளானந்தம் என்பவா் பொறுப்பேற்று 6 நாள்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.