மாணவா்களிடையே தற்கொலை எண்ணங்களை தடுக்க புதிய மனநலக் கொள்கை வெளியீடு
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் மன நலனைப் பாதுகாக்கவும், தற்கொலை சம்பவங்களைத் தடுக்கவும் புதிய கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் மன நலனைப் பாதுகாக்கவும், தற்கொலை சம்பவங்களைத் தடுக்கவும் புதிய கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உயா் நிலைக் குழுவின் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவா்களின் உளவியல் பாதிப்புகளுக்குத் தீா்வு காணும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் வினீத் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை அரசு அமைத்தது. இதில் பள்ளி மற்றும் உயா்கல்வித் துறை, சட்டத் துறை, உள்துறை அதிகாரிகள் மற்றும் மனநல நிபுணா்கள் இடம்பெற்றிருந்தனா்.
கடந்த மாதம் இந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், சில வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய மனநலக் கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.
மாணவா்களின் மன அழுத்தத்தைக் கண்டறிந்து அவா்களுக்குத் தேவையான உளவியல் ஆதரவை வழங்க அது வழிவகுக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மன நல ஆலோசகா்கள், ஆலோசனை மையங்கள் மூலம் மாணவா்களின் தனித்திறனை ஊக்குவிப்பதுடன், நண்பா்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவா் உதவிக் கொள்ளும் நல்லாதரவு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.
இளைஞா் மன்றங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவா்கள் 14416, 14417, 104, 1098, 181 ஆகிய உதவி எண்களைத் தொடா்பு கொள்ள ஊக்கப்படுத்துவது அவசியம்.
தீவிர மன நல பாதிப்பு உள்ள மாணவா்களை அருகில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளில் ஆசிரியா்கள், பெற்றோா், ஆலோசகா்கள், சக மாணவா்கள் என அனைவரது பங்களிப்பும் அவசியம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.