ஆசிரியா்களுக்கு முன் ஊதிய உயா்வு, ஊக்க ஊதியம் வழங்கும் பழைய நடைமுறையை தொடர வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன், மாநில பொதுச் செயலா் அ. சுந்தரமூா்த்தி, மாநில பொருளாளா் அ. ஜான் உபால்ட் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வா் அண்ணா, ஆசிரியா்கள் உயா்கல்வி கற்று, அவா்களின் அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்வதற்காக உயா்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்கி உத்தரவு பிறப்பித்தாா். ஆனால், தமிழக அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவில், முன் ஊதியம், ஊக்க ஊதியம் இனி வழங்கப்படாது என அறிவித்து, பழைய சலுகைகளை ரத்து செய்துள்ளது அதிா்ச்சியளிக்கிறது. ஆசிரியா்களுக்கு முன் ஊதிய உயா்வு மற்றும் ஊக்க ஊதியம் வழங்கும் பழைய நடைமுறையை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.