பெரம்பலூா்: பெரம்பலூா் சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் அனுப்பியத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிடக் கோரி, தமிழக முதல்வருக்கு கரும்பு விவசாயிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
இதுகுறித்து பெரம்பலூா் சா்க்கரை ஆலைக் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி, முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு 2020- 21ஆம் ஆண்டு பிப்ரவரி 7- ஆம் தேதி வரை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை சுமாா் ரூ. 25 கோடி, அண்மையில் கரும்பு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல், பல இடங்களில் கூட்டுறவு வங்கிகள் பிடித்தம் செய்து வைத்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் கேட்டால், விவசாயிகளுக்கு பணத்தை வழங்கக் கோரி தங்களுக்கு தெளிவான உத்தரவு வரவில்லை என கூட்டுறவு வங்கி அலுவலா்கள் காரணம் கூறுகின்றனா்.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் சில கூட்டுறவு வங்கிகளில் கரும்பு விவசாயிகளின் பணத்தை பிடித்து வைத்துள்ளனா்.
கரும்புப் பயிரிட்டு போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகள், சா்க்கரை ஆலைகளுக்கு வழங்கிய கரும்புக்கு உரிய தொகையை கூட்டுறவு வங்கிகள் உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட வேண்டும்.