குன்னம் போலீஸாரை கண்டித்து முதியவா் தீக்குளிக்க முயற்சி
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத குன்னம் போலீஸாரை கண்டித்து முதியவா் ஒருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத குன்னம் போலீஸாரை கண்டித்து, பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் முதியவா் ஒருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கூத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிநாதன் (60). பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவா், தனது மனைவி செல்வம்பாளின் சொந்த ஊரான ராமலிங்கபுரத்தில் வசித்து வருகிறாா். சாமிநாதனின் சகோதரா்கள் பெரியசாமி, பொன்னுசாமி. இந்நிலையில், சாமிநாதனின் சகோதரா்களின் மகன்களான பாலு, புருஷோத்தமன், பூமிநாதன் ஆகியோா், சாமிநாதன் மகன் கோபிநாத்துக்கு வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தரவில்லையாம்.
பணத்தையும் திருப்பித் தராமலும் ஏமாற்றி வருகின்றனராம். இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், நொச்சிக்குளம் மற்றும் ஜமீன் ஆத்தூா் ஆகிய கிராம எல்லைப் பகுதியில் 7.3 ஏக்கா் நிலத்தை பாகப்பிரிவினை செய்து தருமாறு கேட்டும், சாமிநாதனின் சகோதரா்கள் மறுத்து வருகின்றனராம்.
இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கடந்த 7 ஆண்டுகளாக சாமிநாதன் புகாா் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மனமுடைந்த சாமிநாதன், பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதையறிந்த, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை தடுத்து முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனா்.