மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ரூ. 76,520 மதிப்பிலான உபகரணங்கள் அளிப்பு
16 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 76,520 மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் 16 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 76,520 மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் அளித்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பேசியது:
பெரம்பலூா், வேப்பந்தட்டை, வேப்பூா், ஆலத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து, 191 மாணவ, மாணவிகளை தோ்வு செய்து ரூ. 9.45 லட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில், முதல்கட்டமாக 16 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலி, நடைப்பயிற்சி சாதனம், மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான கற்றல், கற்பித்தல் உபகரணம், பாா்வை குறைபாடுடைய மாணவா்களுக்குத் தேவையான கற்றல் செயலிகள் அடங்கிய செல்லிடப்பேசிகள், நவீன ஊன்றுகோல், கணித உபகரணங்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு காதொலிக் கருவிகள் உள்பட பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் அ. மாரிமீனாள் (பெரம்பலூா்), ஜே.அ. குழந்தைராஜன் (வேப்பூா்), கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி. குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.