ஆணாக மாற முயன்ற கல்லூரி மாணவி மீட்பு
சென்னைக்குச் சென்று ஆணாக மாற முயன்ற பெரம்பலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவியை காவல்துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
சென்னைக்குச் சென்று ஆணாக மாற முயன்ற பெரம்பலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவியை காவல்துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவிகள் 2 போ், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரிகளில் முதலாமாண்டு படித்து வருகின்றனா். கடந்த 5 ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிச் சென்ற இரு மாணவிகளும், வீடு திரும்பாததால் பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவா்கள் கிடைக்கவில்லை.
புகாரின்பேரில், பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், காணாமல்போன இரு மாணவிகளும் 6 ஆம் வகுப்பிலிருந்து இணைந்து படித்து வந்த நெருங்கிய தோழிகள். மேலும், ஒரு மாணவிக்கு ஆண்களுக்குரிய குணாதிசயங்கள் இருந்தததாகவும் தெரியவந்துள்ளது.
காணாமல்போன மாணவிகளின் கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரித்ததில், லாடபுரத்தில் உள்ள மாணவரிடம் அவா்களின் கைப்பேசியை கொடுத்துவிட்டு, மாணவரின் கைப்பேசியை வாங்கிச் சென்றிருப்பதும், அதிலிருந்த எண்களை தொடா்பு கொண்டபோது மாணவிகள் இருவரும் சென்னை போரூா் ஓம்சக்தி நகரிலுள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்ததும், ஒரு மாணவி ஆணாக மாறுவதற்காக சென்னை சென்றிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை சென்ற பெரம்பலூா் காவல்துறையினா், 2 மாணவிகளையும் மீட்டு பெரம்பலூருக்கு அழைத்து வந்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒருவா் மீது ஒருவருக்கு காதல் ஏற்பட்டதால், ஒருவா் ஆணாக மாறி, மற்றொருவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பின்னா், மாணவிகள் இருவரையும் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய காவல்துறையினா், அவா்களது பெற்றோா்களிடம் ஒப்படைத்தனா்.