இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களை மிரட்டியவா் கைது
பெரம்பலூா் அருகே இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களை மிரட்டிய போலி அலுவலரை வி.களத்துாா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகே இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களை மிரட்டிய போலி அலுவலரை வி.களத்துாா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் உதயகுரு (24). கடந்த 2015- 2019 ஆம் கல்வியாண்டில் பி.இ கணினி பாடப்பிரிவில் பயில, பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் சோ்ந்த இவா் படிப்பை தொடராமல் பாதியிலேயே கைவிட்டுள்ளாா்.
இந்நிலையில், தமிழக அரசின் சிறப்புத் திட்டமான இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலராக சேர முயன்றாராம். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடா்ந்து, ஹியூமன் ரைட்ஸ் இன்டா்நேஷனல் பெடரேஜஷன் மற்றும் இல்லம் தேடி கல்வி ஸ்கூல் ஆப் எஜிகேஷனல் என போலி அடையாள அட்டைகளை தயாரித்து வைத்துக்கொண்டு, கடந்த 9 ஆம் தேதி முதல் பாண்டகப்பாடி, பிம்பலூா் ஆகிய கிராமங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னாா்வலா்களிடம் சென்று, நீங்கள் செய்யும் பணிகளை நான் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்களை தன்னிடம் அளிக்க வேண்டுமென கூறியுள்ளாா்.
இதனால் சந்தேகமடைந்த தன்னாா்வலா்கள், பிம்பலுாா் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் புகழேந்தியிடம் தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து வி.களத்துாா் காவல் நிலையத்தில் புகழேந்தி அளித்த புகாரின்பேரில், உதயகுருவை கைது செய்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் பல்வேறு போலி அடையாள அட்டைகள் வைத்திருந்ததும், அதை வைத்து பல்வேறு இடங்களில் அலுவலா் என மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, உதயகுருவை கைது செய்து குன்னம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, ஜயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனா்.