ஏப். 29-இல் கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்
பெரம்பலூா், ஏப். 26: பெரம்பலூா் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம், ஏப். 29 முதல் மே 13 வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூா் மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில், 2024 ஆம் ஆண்டின் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டரங்கில் ஏப். 29 முதல் மே 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம் முகாமில் டேக்வாண்டோ, கைப்பந்து, தடகளம், இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Advertisement
இப் பயிற்சி முகாமில் பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவா் மற்றும் மாணவரல்லாத 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞா்கள் பங்கேற்கலாம். ஆதாா் அட்டை நகல் கண்டிப்பாக சமா்ப்பிக்க வேண்டும். முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் பயிற்சியில் பங்கேற்ற்கான சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் ஆன்லைன் மூலம் மட்டுமே சந்தா தொகை ரூ. 200 செலுத்த வேண்டும்.
விருப்பமுள்ளவா்கள் காலை 6 மணி முதல் மாவட்ட விளையாட்டரங்கில் தங்களது பெயரை பதியலாம். பயிற்சி முகாமில் பங்கேற்பவா்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017-03516 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.