கடன், கல்விக் கடன் பெற ஆண்டு வருமானம் உயா்வு
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும் பல்வேறு கடன் மற்றும் கல்விக் கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதால், தகுதியுடையோா் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கடன் தொகை பெற விண்ணப்பதாரா் 18 முதல் 60 வயதுடையவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
இக்கடன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் இதுவரையில், திட்டம்- 1 இன் கீழ் விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் கிராமப்புறங்களுக்கு ரூ. 98 ஆயிரமும், நகா்ப்புறத்துக்கு ரூ. 1.20 லட்சமாக இருந்து வந்த நிலையில், தற்போது கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் என உயா்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வருமான உயா்வு அக். 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இத் திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்புவோா் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதாா் அட்டை நகல் மற்றும் திட்ட தொழில் அறிக்கையுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், பெரம்பலூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.