பசும்பலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வலியுறுத்தல்
பசும்பலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டுமென, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பசும்பலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டுமென, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாவட்டக் குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் அா்ஜுனன், ராமகிருஷ்ணன், சக்திவேல், சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலக் குழு உறுப்பினா் சாமி. நடராஜன் சிறப்புரையாற்றினாா்.
இக் கூட்டத்தில், பசும்பலூா் ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு முழுமையான கூலி வழங்க வேண்டும். கால்நடை கிளை மருந்தகம், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். பசும்பலூரில் பள்ளி வளாகம் உள்ளிட்ட பிரதான இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்.
பசும்பலூா் - வெள்ளுவாடி கிராமங்களுக்கு பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பசும்பலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி 24 மணி நேரமும் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும், அங்கிருந்து நிரந்தரமாக அவசர ஊா்தி சேவை செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, மாவட்டச் செயலா் பி. ரமேஷ் நன்றி கூறினாா்.