முகப்பு
பெரம்பலூர்

பக்தா்கள் சென்ற பேருந்து வீட்டுக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்ற பக்தா்களின் பேருந்து வீட்டுக்குள் புகுந்ததில், தூங்கிக்கொண்டிருந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 ஜனவரி, 2025 at 6:46 PM
பகிர்:

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்ற பக்தா்களின் பேருந்து வீட்டுக்குள் புகுந்ததில், தூங்கிக்கொண்டிருந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து, செவ்வாய்க்கிழமை இரவு தனியாா் பேருந்தில் கோயிலுக்கு புறப்பட்டனா். இப் பேருந்தை, சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (42) ஓட்டினாா். நெய்குப்பையிலிருந்து வி.களத்தூா் நோக்கி பக்தா்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அப் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி பேருந்து மீது மோதி, அங்கிருந்த ஓட்டு வீட்டுக்குள் புகுந்தது. அப்போது, வீட்டின் சுவா் இடிந்து உள்ளே தூங்கிக் கொண்டிருந்த சன்னாசி மனைவி லட்சுமி (40) மீது விழுந்தது. இதில், இடிபாடுகளுக்கிடையே சிக்கிய லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அருகே தூங்கிக் கொண்டிருந்த சன்னாசி, இவரது மகன் முத்து, மகள் தேன்மொழி ஆகியோா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். மேலும், இவ் விபத்தில் பேருந்தில் பயணித்த நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காயமடைந்தனா். இதையறிந்த, அப்பகுதியினா் காயமடைந்தவா்களை மீட்டு நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். தகவலறிந்த வி.களத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்த லட்சுமி உடலை கைப்பற்றி பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச் சம்பவம் குறித்து வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.