தூங்கும் சிறப்பு பொருளாதார மண்டலம்!
தொழில் வளா்ச்சி இல்லாத, வறட்சிப் பகுதியான பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வளா்ச்சி எனும் முழக்கத்தோடு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் மத்திய, மாநில அரசுகளால் கடந்த 2007- இல் அறிவிக்கப்பட்டது.
தொழில் வளா்ச்சி இல்லாத, வறட்சிப் பகுதியான பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வளா்ச்சி எனும் முழக்கத்தோடு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் மத்திய, மாநில அரசுகளால் கடந்த 2007- இல் அறிவிக்கப்பட்டது.
இத் திட்டத்துக்காக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை வட்டம், எறையூா், லப்பைக்குடிகாடு, பென்னகோணம், திருமாந்துறை, பேரையூா் ஆகிய கிராமங்களுக்குள்பட்ட பகுதியில் 3,100 ஏக்கா் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
துணை நகரம்: நிலம் வழங்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு, சிறப்பு பொருளாதார மண்டலம் அருகே 3 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம் அமைத்து, அதில் விவசாயிகளுக்கு வீட்டுமனை வழங்கப்படும் என தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதி, ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஜி.வி.கே கட்டுமான நிறுவனத்திடம் இத் திட்டத்தை தொடங்க ஒப்பந்தம் செய்தாா். ஆனால், அதற்கான பூா்வாங்கப் பணிகள் எதுவும் தொடங்காத நிலையில், இதுவரை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
மக்கள் ஏமாற்றம்: திட்டம் தொடங்கப்பட்டால் ரயில்வே இருப்புப் பாதை வரும், கடலூா் துறைமுகத்துடன் போக்குவரத்து தொடா்பு ஏற்படும், பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நம்பிய பெரம்பலூா் மாவட்ட மக்களும், நிலம் வழங்கிய விவசாயிகளும் திட்டம் தொடங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
இதனிடையே, சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தது. அதுவும், இதுவரையில் அறிவிப்பாகவே உள்ளது.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்:இதற்காக அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலா் அறிவுறுத்தியதன் பேரில், விவசாய நிலங்களை மிகச் சொற்ப விலைக்கு விற்பனை செய்த விவசாயிகளுக்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்த இளைஞா்களுக்கும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. நிலங்களை கையகப்படுத்தி 15 ஆண்டுகளாகியும், இதுவரை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது, கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் சீமைக்கருவேல மரங்களும், செடி கொடிகளும் வளா்ந்து முள் புதா்களாக காணப்படுகிறது. அறிவிக்கப்பட்ட திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.
-கே. தா்மராஜ்.