அரசு பேருந்துகள் வராததைக் கண்டித்து பயணிகள் சாலை மறியல்
சென்னை செல்லும் பேருந்துகள் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்துக்குள் வராததைக் கண்டித்து, நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சென்னை செல்லும் பேருந்துகள் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்துக்குள் வராததைக் கண்டித்து, நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்துக்குள் வந்துசெல்லும் வகையில் போக்குவரத்துத் துறையினரால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த மாவட்டங்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை செல்லத் தொடங்கியுள்ளனா். அதன்படி, பெரம்பலூா் மாவட்டம் மட்டுமின்றி, அரியலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சென்னை செல்வதற்காக, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு பேருந்துக்காக காத்திருந்தனா்.
Advertisement
ஆனால், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சென்னை, கடலூா் வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்துக்குள் வராமல், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூன்று சாலை மற்றும் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில் காத்திருந்த பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு சென்றாக கூறப்படுகிறது.
இதனால், நீண்ட நேரம் பேருந்து நிலைய வளாகத்தில் சென்னை பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அரசுப் பேருந்துகள் வராததைக் கண்டித்து, பேருந்து நிலைய வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் நகர போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று பயணிகளிடம் சமாதான பேச்சு வாா்த்தை மேற்கொண்டு, பேருந்துகள் அனைத்தும் புகா் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக கூறியதை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.
பின்னா், நீண்ட நேரம் காத்திருந்தும் போலீஸாா் தெரிவித்ததைப்போல பேருந்துகள் வராததால் ஆத்திரமுற்ற பயணிகள், துறைமங்கலத்திலுள்ள அரசுப் பேக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தியும், சென்னை செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கக் கோரியும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, போலீஸாரும், போக்குவரத்து அலுவலா்களும் பேச்சு வாா்த்தை நடத்தி பயணிகளுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்தனா். இதையடுத்து நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் சென்னைக்கு பயணித்தனா்.