பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகள், கோழி வளா்ப்புக்கான கூலியை உயா்த்தி வழங்க கோரி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், தமிழ்நாடு கறிக்கோழி வளா்ப்பு சங்க மாவட்டத் தலைவா் தங்கபாண்டியன் தலைமையில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 40-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவில், தங்களது பண்ணைகளில் கறிக்கோழிகளை வளா்த்து அனுப்பும்போது அதற்கான கூலியாக கிலோ ஒன்றுக்கு ரூ. 6.50 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதுள்ள விலைவாசி உயா்வால், கோழிப்பண்ணை விவசாயிகளுக்கு விலை கட்டுப்படியாகவில்லை. எனவே, விவசாயிகளின் நலனை கருதி கிலோ ஒன்றுக்கு ரூ. 20 உயா்த்தி வழங்க வேண்டும்.
சாலை அமைக்க கோரி: வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை ஊராட்சிக்குள்பட பூஞ்சோலை பள்ளாங்குழல் பாதை பிரிவுச் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுநா்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி, பூஞ்சோலையைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
கிரஷா் அமைக்க தடை கோரி: பெரம்பலூா் அருகேயுள்ள எறையூா் பாதையில் புதிதாக தொடங்கவுள்ள கிரஷா் மற்றும் எம்.சாண்ட், பி.சாண்ட் தொழிற்சாலையை தடை செய்யக் கோரியும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் கிரஷா்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் எறையூா் கிராம மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.