பெரம்பலூா் அருகே சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்பட்டு வரும் தனியாா் காலணி நிா்வாகத்தைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியை புறக்கணித்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நிா்வாகத்தினா் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சா்க்கரை ஆலை அருகேயுள்ள அரசின் சிப்காட் தொழிற்பூங்காவில், ஜே.ஆா்.கோத்தாரி தனியாா் காலணி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, பெரம்பலூா் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு, கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தொழிலாளா்களுக்கு நாள்தோறும் சுழற்சி முறையில் 8 மணி நேரம் பணி வழங்கப்பட்டு வருகிறது. மாத ஊதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில், பிப். 1-ஆம் தேதி முதல் அனைத்து தொழிலாளா்களும் 12 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என சம்பந்தப்பட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த தொழிலாளா்கள் சம்பந்தப்பட்ட நிா்வாகிகளை சந்தித்து முறையிட்டபோது, ஆலை நிா்வாகம் தெரிவித்தவாறு பணிபுரியவும், இல்லாவிடில் பணியை விட்டு விலகிச் செல்லலாம் என வும், கூடுதலாக 4 மணி நேரப் பணிக்கான தொகையை வாரம் ஒருமுறை வழங்கப்படும் என தெரிவித்தனராம்.
இதனால் அதிருப்தியடைந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், 12 மணி நேர வேலைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கூடுதல் நேர பணிக்கான ஊதியத்தை மாத ஊதியத்துடன் வழங்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வெண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியா்கள் பணியை புறக்கணித்து காலணி தொழிற்சாலை எதிரே சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ஆலை நிா்வாகத்தினா் தொழிலாளா்களுடன் மேற்கொண்ட பேச்சுவாா்ததையில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததை தொடா்ந்து, காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு ஊழியா்கள் கலைந்துசென்றனா்.