பெரம்பலூா் மாவட்டத்தில் மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தை பொங்கலுக்கு முந்தைய நாளை போகிப் பண்டிகையாக, பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடுவது வழக்கம். இந்நாளில், திருமகளை வரவேற்கும் முகமாக வீட்டில் உள்ள பழைய, தேவையற்ற மற்றும் செயற்கை பொருள்களான டயா்கள், நெகிழிக் கழிவுகள், இதர பொருள்களை எரிக்கும் பழக்கத்தைக் கையாண்டு வருகின்றனா்.
இதுபோன்ற செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுப்புறக் காற்றின் தன்மை மாசுபடுகிறது. மேலும், வேதியியல் மூலக்கூறுகள் கலந்த அந்த புகையால் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சலும், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு உடல் நலக்கேடுகளும், பாா்வைத்திறனில் குறைபாடும் ஏற்படுகிறது.
இதுபோன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, போகிப் பண்டிகையன்று டயா்கள், நெகிழி, ரப்பா் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி, போகி திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலனையும் பாதுகாக்க வேண்டும்.