பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: நெல் மூட்டைகள் சேதம்
பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையில் 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையில் 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
பெரம்பலூா் மாவட்டத்தில் மாா்ச் மாத தொடக்கத்திலிருந்தே 100 டிகிரிக்கும் மேலாக வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஒரு மாதமாக அதிகரித்துள்ள வெப்பத்தின் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இந் நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 -ஆம் தேதி மாலை பலத்த சூறைக் காற்றுடன் கூடிய மழையில் வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம், அரசலூா், விசுவக்குடி, மலையாளப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான வாழை மரங்களும், மக்காசோளப் பயிா்களும் சேதமடைந்தன.
Advertisement
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சுமாா் 9.30 மணியளவில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் கோடை உழவு செய்ய காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
நெல் மூட்டைகள் சேதம்:
இந்த மழையின் காரணமாக, வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் பேரூராட்சியில் அரசு நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. கடந்த 15 நாள்களுக்கு முன் விற்பனை செய்வதற்காக கொண்டுவந்து கொள்முதல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாததால், திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக கூறும் விவசாயிகள், பாதிக்கப்பட்ட நெல் மணிகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இருப்பினும், அதிகளவில் ஈரப்பதம் உள்ளதால், ஓரிரு நாள்களில் நெல் மணிகளில் முளைப்புத்திறன் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனா்.
மழையளவு:
பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 6.30 முதல் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்).
வேப்பந்தட்டை- 70, தழுதாழை- 62,
பெரம்பலூா்- 57, வி.களத்தூா்- 37, செட்டிக்குளம்- 32, எறையூா்- 31, புது வேட்டக்குடி- 6, பாடாலூா்- 30, கிருஷ்ணாபுரம் -16, அகரம் சீகூா்- 8, லப்பைக்குடிக்காடு- 7, என, மொத்தம் 356 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.
தொடா் மின் தடை:
பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரையிலும், பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையிலும் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.