முகப்பு
புதுக்கோட்டை

அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்: அரசின் ஆதரவை நாடும் மண்பாண்டத் தொழிலாளர்கள்

கார்த்திகை தீபத்திருநாளுக்காக பல்வேறு வடிவங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களது தொழிலை மேம்படுத்த அரசின் உதவியை எதிர்பார்க்கின்றனர்.

Updated On : 8 டிசம்பர், 2016 at 5:35 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:22 AM

கார்த்திகை தீபத்திருநாளுக்காக பல்வேறு வடிவங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களது தொழிலை மேம்படுத்த அரசின் உதவியை எதிர்பார்க்கின்றனர்.
புதுக்கோட்டை- அரிமளம் சாலையில் உள்ள குசலாக்குடி கிராமத்தில் வசிக்கும் மக்கள் காலங்காலமாக மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். விழாக் காலங்களில் பக்தர்களால் பயன்படுத்தப்படும் உருவச்சிலைகளையும், அகல் விளக்குகளையும் இவர்கள் குடிசைத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
மேலும், பொங்கல் பானைகளோடு, பாரம்பரிய மண் பாத்திரங்களான சோற்றுப்பானை, குழம்புச்சட்டிகள், குடிநீர்த் தொட்டிகள், பானைகள், நெற்குதிர் போன்றவற்றையும் தேவைக்கேற்ப தயாரித்து வருகின்றனர்.
ஆனால், இதற்குத் தேவையான மூலப்பொருளான களிமண் தரமானதாகக் கிடைக்காத நிலையில், அரசு உதவிகளும் போதிய அளவு கிடைக்காததால், பல்வேறு சிரமங்களுக்கு இடையே இத்தொழிலை அவர்கள் மேற்கொண்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
வரும் 12 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ள குசலாக்குடியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர் செ. ராமன் இதுகுறித்து கூறியது: மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ சுமார் 10 ஆயிரம் பேர் மண்பாண்டத் தொழிலைச் செய்து வருகின்றனர். எங்களது குடும்பம் பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் தொழில் இது. 1000 அகல் விளக்குகள் (சிறியது) கொண்ட மூட்டையை மொத்த வியாபாரிகளிடம் ரூ. 500-க்கு விற்கிறோம். இங்கு தயாரிக்கும் அகல்விளக்குகள் தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது.
கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் அளிப்பதைப் போல, மண்பாண்டத் தொழிலுக்கும் அரசு சலுகை வழங்க முன்வர வேண்டும். இடம் இல்லாதவர்களுக்கு தொழில் செய்யும் இடத்தையும், அதற்கான கொட்டகையையும் அமைத்துத்தர வேண்டும்.
மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு என கூட்டுறவு சங்கத்தை உருவாக்க வேண்டும். தமிழக அரசின் மழைக்கால நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ள 1400 பேரில், 452 பேருக்கு மட்டுமே உதவி கிடைத்துள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.