அரியலூர் மாவட்டம் திருமானூர்,தா.பழூர் ஆகிய பகுதிகளிலுள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என வலியுறுத்தி, குலமாணிக்கம், இலந்தைக்கூடம், செம்பியக்குடி, கண்டராதித்தம் ஆகிய 4 கிராமங்களில் மக்கள் சேவை இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மறுதையாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி அதன் உபரி நீரை கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு திருப்பி விட வேண்டும். 5,000 ஏரிகளை உலகுக்கு தந்த செம்பியன்மாதேவிக்கு, செம்பியக்குடியில் மணிமண்டபம் கட்ட வேண்டும். வெங்கனூர் ஆண்டி ஓடை ஏரி, பழங்காநத்தம் மானோடை பெரிய ஏரி, சுக்கிரன் ஏரி, பொன்னேரி உள்ளிட்ட ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு அந்த இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.