ஊழியருக்கு இழப்பீடு கோரி மது ஆலை முற்றுகை
கந்தர்வகோட்டை அருகே நெஞ்சுவலியால் இறந்த மதுபான ஆலையின் லாரி ஓட்டுநர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு அந்த ஆலையை உறவினர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
கந்தர்வகோட்டை அருகே நெஞ்சுவலியால் இறந்த மதுபான ஆலையின் லாரி ஓட்டுநர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு அந்த ஆலையை உறவினர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
கந்தர்வகோட்டை தாலுகா, கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் மதுபான ஆலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், ராஜாளிவிடுதியைச் சேர்ந்த அ. குழந்தைராஜ் (48) லாரி ஓட்டுநராக இருந்தார்.
இவர் கடந்த மாதம் 15-ம் தேதி இந்த ஆலையிலிருந்து லாரியில் மது ஏற்றிக்கொண்டு, தருமபுரி குடோனுக்குச் சென்றிருந்தபோது நெஞ்சுவலி வந்து இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மதுபான ஆலை நிர்வாகத்திடம் இழப்பீடு கேட்டபோது, அவர்கள் சரியான பதில் கூறவில்லையாம்.
இதனால் கோபமடைந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட உறவினர்கள் வியாழக்கிழமை கல்லாக்கோட்டை மதுபான ஆலை முன் முற்றுகையிட்டனர். தகவலறிந்த மதுபான ஆலை மேலாளர், காவல் ஆய்வாளர் மன்னர்மன்னன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.