புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே நகரம் ஊராட்சியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீரமங்கலம் அருகேயுள்ள நகரம் ஊராட்சி மக்களுக்கு பல நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் இல்லையாம். மேலும், சிலர் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் மின்மோட்டார்களை கொண்டு நீரை திருடுகின்றனராம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலை நகரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற வருவாய்த் துறையினர், கீரமங்கலம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.