பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் பாலாஜி சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு ஸ்ரீ சக்கரம் நிறுவப்பட்டது. தொடர்ந்து 108 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடைபெற்றது. சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அதேபோல, வேங்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, காயாம்பட்டி, ஒலியமங்கலம், படுதினிப்பட்டி, எழுவன்குறைப்பட்டி, சுரைக்காய்பட்டி, வெட்டுக்காடு, மரவபட்டி, சுந்தம்பட்டி, கீழக்காடு, வேங்கம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் பூத்தட்டு, பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.