நகையை திருப்ப கால அவகாசம் வழங்கக் கோரி கந்தர்வகோட்டை அருகிலுள்ள வங்கியை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
புதுநகர் அரசு உடமையாக்கப்பட்ட வங்கியில் அப்பகுதியை சேர்ந்த புனல்குளம், நடுப்பட்டி, நாயக்கர்பட்டி, மெய்க்குடிப்பட்டி, மஞ்சப்பேட்டை, பிசானத்தூர், தெத்துவாசல்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பயிர்கடன் மற்றும் குடும்பச் செலவிற்காக வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்தனர்.
இதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதால் வங்கியின் மூலம் பொதுமக்களுக்கு நகைகளை திருப்பக் கூறி நோட்டீஸ் வந்தது. இதையடுத்து நகையை திருப்ப காலஅவகாசம் கோரி அதிகாரியிடம் கடன்தாரர்கள் கோரிக்கை வைத்தனர். இதை வங்கி மேலாளர் ஏற்று இன்னும் 2 மாதங்களுக்கு ஏல தேதியை ஒத்திவைப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.