இலுப்பூர் அருகே துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர். மேலும், இருவரைத் தேடி வருகின்றனர்.
இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் பேவரம்பண்ணையைச் சேர்ந்தவர் அழகுசாமி மகன் முனியாண்டி(37). இவருக்கும், ராப்பூசல் பண்ணைக்களத்தைச் சேர்ந்த முத்துவீரன் மகன் ரவி(31)க்கும் இடையே சொத்துத் தகராறு இருந்துவந்ததாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இருவருக்கும் இடையே சொத்து தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த ரவி மிரட்டல் விடுத்தாராம். மேலும், உடனிருந்த வடிவேல் நாட்டுத் துப்பாக்கியைக் காட்டியும், செந்தில்குமார், கருப்பையன் மற்றும் கனகராஜ் ஆகியோரும் சேர்ந்து மிரட்டல் விடுத்தனராம். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த போலீஸார், ரவி, வடிவேல், செந்தில் குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீஸார், இச்சம்பவத்தில் தொடர்புடைய கருப்பையன், கனகராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.