அரசு இசைப் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
புதுக்கோட்டை அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7ஆம் வகுப்பு தேர்ச்சியும், நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய வகுப்புகளில் சேர விரும்புவோர் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 12 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள்.
பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அரசு சான்றிதழ் படிப்பான இந்தப் பயிற்சியில் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளும், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்களில் வாய்ப்புகள் பெறலாம்.
இசைப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து, தங்கும் வசதி, கல்வி உதவித் தொகை , சீருடை, காலணி, மிதிவண்டி உள்ளிட்ட சலுகைகள் அரசு விதிகளின்படி வழங்கப்படும். இதுதவிர, அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 ஊக்கத் தொகை வழங்கப்படும். விரும்பமுள்ள மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.