புதுக்கோட்டையில் சர்கார் திரைப்படம் திரையிட்டுள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அந்த திரையரங்குகளில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தீபாவளியன்று நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படம் வெளியாகி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புதுகையில் 3 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சு.கணேஷூக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலைத் தொடர்ந்து திரையரங்குகளில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் வணிகவரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதிகாரிகள் உள்ளே சென்று ரசிகர்களிடம் டிக்கெட் விலை குறித்து விசாரித்தனர். ஆய்வின்போது, 6 ஆம் தேதியிலிருந்து டிக்கெட் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்குப் பின்னர் வருவாய் கோட்டாட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது டிக்கெட் கவுண்டரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் ஆன்லைனில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தடை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.