புதுகையில் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் செயலாக்கம் : ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2018 - 19 ஆம் நிதியாண்டில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் அமைத்தல் முதலான திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 35 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரையும், இதர விவசாயிகளுக்கு 25 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை அதிகபட்ச மானியத் தொகை வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலையுள்ள இயந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
தனக்குத் தேவைப்படும் ஏதாவது 2 வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே ஓர் ஆண்டில் மானிய விலையில் விவசாயிகள் வாங்கிடஇயலும். வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிடும் வகையில் அமைக்கப்படுகிறது. இவ்வாறான ரூ.25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 04322 - 221816 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.