புதுக்கோட்டை

கல்குவாரியில் வெடிவிபத்து; மேலாளர் உள்பட 2 பேர் சாவு: இறந்தவரின் தாய் அதிர்ச்சியில் மரணம்

DIN

அன்னவாசல் அருகே தனியார் கல்குவாரியில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட வெடிவிபத்தில் 2 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். விபத்தில் மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாயும்  இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த ரங்கசாமி மகன் முத்துசாமி(41). இவருக்குச் சொந்தமான கல்குவாரி முத்துடையான்பட்டியில் உள்ளது. அந்த கல்குவாரியில் முத்துடையான்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்(50) மேலாளராக வேலை செய்து வந்தார்.
கல்குவாரியில் கடந்த புதன்கிழமை (செப்.12) வெடி வைக்கப்பட்டது.  இதில், பாறையில் வைத்த வெடிகள் அனைத்தும் வெடித்து விட்டதா என்பதை வியாழக்கிழமை இரவு  மேலாளர் ஆறுமுகம் உள்பட 5 பேர் பார்வையிட்டனர். 
அப்போது, வெடிக்காமல் இருந்த சில வெடிகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் கல்குவாரி மேலாளர் ஆறுமுகம், வருதாவயலைச் சேர்ந்த பழனிவேல் (60) ஆகியோர் பலத்த காயமடைந்து நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.
குருக்கத்தான்பட்டியைச் சேர்ந்த சண்முகம்(34), தட்டாம்பட்டியைச் சேர்ந்த கணேசன் (40), திருச்சி அண்ணாவளைவு பகுதியைச் சேர்ந்த சீனீவாசன்(33) ஆகிய தொழிலாளிகள் 3 பேர் காயமடைந்தனர். 
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளனூர் போலீஸார் காயமடைந்த 3 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஆறுமுகம், பழனிவேல் ஆகியோரது சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மகன் ஆறுமுகம் இறந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட அவரது தாய் தீர்த்தாயி(74) மாரடைப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார், கல்குவாரி உரிமையாளர் முத்துசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT