ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மு.ராஜநாயகம் தலைமையில் அறந்தாங்கி ஒன்றிய செயலாளர்கள் தெற்கு
அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மு.ராஜநாயகம் தலைமையில் அறந்தாங்கி ஒன்றிய செயலாளர்கள் தெற்கு பி.எம்.பெரியசாமி, வடக்கு சி.வேலாயுதம் முன்னிலையில் அக்கட்சியினர் எம்ஜிஆர் சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து அம்மா உணவகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, காரைக்குடி சாலையில் உள்ள அன்னை செவித்திறன் வாய்பேசாதோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அ.ம.மு. க சார்பில்...: அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ.இரத்தினசபாபதி தலைமையில் நகரச் செயலாளர் க.சிவசண்முகம், ஒன்றியச்செயலாளர்கள் அறந்தாங்கி தெற்கு த.செல்வராஜ், வடக்கு க.ராஜ்குமார், ஆவுடையார்கோவில் சி.செல்லக்கண்ணு உள்ளிட்டோர் முன்னிலையில் கருமாரியம்மன் கோயில் வாயிலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
பொன்னமராவதி: பொன்னமராவதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற விழாக்களுக்கு, ஒன்றியச் செயலர் ராம.பழனியாண்டி தலைமைவகித்தார். தொடக்கமாக அதிமுக கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா திருவுருவப்படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை பா. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
விராலிமலை: தமிழக சுகாதாரத் துறை சார்பில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், மொத்தம் 620 நோயாளிகள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து மருத்துவ காப்பீடு திட்ட அட்டை 200 பேருக்கு வழங்கப்பட்டது. விழாவையொட்டி, ஒன்றிய, நகர அதிமுக சார்பில் காமராஜர் நகர், கடைவீதி, சோதனைச்சாவடி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர். விழாவில் மாவட்ட கூட்டுறவு பால்வளத் தலைவர் எஸ். பழனியாண்டி, இலுப்பூர் பேருராட்சி முன்னாள் தலைவர் குரு. ராஜமன்னார், அரசு ஒப்பந்ததாரர் ஆர்.தர்மலிங்கம், நிலவள வங்கி இயக்குநர் வெல்கம்மோகன், ஆர்.பி ராமச்சந்திரன், ஜெ. ஆர். அய்யப்பன், சி. தீபன், பி. சரவணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.