புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி பொன்விழா வளைவு மற்றும் பெரிய அளவிலான பொன்விழா அரங்கமும் அமைக்கப்படும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது மாணவிகளின் தேவை கருதி கல்லூரி வளாகத்தில் ரூ. 2 கோடியில் நடைபெறும் புதிய கட்டட கட்டுமானப் பணி விரைவில் நிறைவுறும். கல்லூரி தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி கல்லூரி வளாகத்தில் பொன்விழா அரங்கு மற்றும் பொன்விழா வளைவு ஆகியனஅமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் தமிழ்நாடு வந்திருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் விழாவில் பங்கேற்று பொங்கல் வைத்தனர். மாணவிகள் பெரும்பாலானோர் பட்டுப்புடவை அணிந்து வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன், மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழுஉறுப்பினர் க பாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.