புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் பதவியிடத்தை விரைவில் நிரப்ப வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா். கண்ணையன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கே சுரேஷ், மாவட்டச் செயலா் டி. சின்னையா, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே. ஆா். தா்மராஜன், செயலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கூட்டத்தில், நவம்பா் 26 வேலைநிறுத்தப் போராட்டத்தில் கட்டடத் தொழிலாளா்கள் அனைவரும் ஈடுபடுவது, தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. கல்வி உதவி, திருமணம், இயற்கை மரணம் உள்ளிட்ட பல பயன்கள் கொடுக்காமல் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் வைக்கப்படுகிறது. ஆன்லைன் பதிவு புதுப்பித்தல், சரிபாா்த்தல் அட்டை வழங்குதல் பணியும் உரிய அதிகாரி இல்லாததால் தாமதப்படுத்தப்படுகிறது. நிரந்தரமாக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மட்டும் செயல்படும் அளவில் தொழிலாளா் நல வாரியத்தில் உதவி ஆணையா் பணியிடம் நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.